இலந்தைகூடம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர் 15 பேர் காயம்


இலந்தைகூடம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர் 15 பேர் காயம்
x
தினத்தந்தி 6 May 2018 10:45 PM GMT (Updated: 6 May 2018 8:05 PM GMT)

இலந்தைகூடம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் காளைகளை போட்டி போட்டு அடக்கினர். இதில் 15 பேர் காயமடைந்தனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், இலந்தைகூடம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதையொட்டி வடக்குவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 450-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் மாந்துறையை சேர்ந்த விக்னேஷ் (வயது 24), தெரணியை சேர்ந்த மணிகண்டன் (21), கோவில் எசனையை சேர்ந்த சின்னதுரை (60), செல்லப்பன்பேட்டையை சேர்ந்த தர்மலிங்கம் (50), க.மேட்டுத்தெருவை சேர்ந்த மணி (25) உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் படுகாயமடைந்த சின்னதுரை, செல்லப்பன்தர்மலிங்கம், மணி ஆகிய 3 பேரையும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்கம்-வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, நாற்காலிகள், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை காண அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இலந்தைகூட கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story