ஐ.டி.ஐ. படித்தவர்கள் அகில இந்திய தொழில் பழகுநர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


ஐ.டி.ஐ. படித்தவர்கள் அகில இந்திய தொழில் பழகுநர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 7 May 2018 12:21 AM GMT (Updated: 7 May 2018 12:21 AM GMT)

ஐ.டி.ஐ. படித்தவர்கள் அகில இந்திய தொழில் பழகுநர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது.

தூத்துக்குடி,

மத்திய அரசு வழங்கும் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் (என்.ஏ.சி.) பெறும் வகையில் அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட தொழில் பிரிவில் படித்து தேசிய தொழிற் சான்றிதழ் (என்.டி.சி.) பெற்றவர்கள், இதே தொழில் பிரிவில் தனித்தேர்வராக அகில இந்திய தொழில் பழகுநர் தொழில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் படித்து தேர்ச்சியடைந்து, தேசிய தொழிற் சான்றிதழ் பெற்று, தொழிற்சாலைகளில் தொழில் பழகுநர் பயிற்சி பெற்று வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான செய்முறை தேர்வு வருகிற 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. பொறியியல் படம் வரைதல் தேர்வு 15-ந் தேதியும், ஆன்லைனில் எழுத்து தேர்வு வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையும் நடக்கிறது.

இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் வேப்பலோடையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வழங்கப்படுகிறது.

எனவே ஐ.டி.ஐ. முடித்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகத்தை 0462-2551251 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story