1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது


1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2018 11:00 PM GMT (Updated: 10 May 2018 8:00 PM GMT)

வேலூர், பாணாவரம், காட்பாடி பகுதிகளில் இருந்து 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்,

வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை சைதாப்பேட்டை, சத்துவாச்சாரி பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சைதாப்பேட்டை தோப்பாசாமி கோவில் தெருவில் காய்கறிகளுடன் ரேஷன் அரிசி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அங்கு காய்கறி விற்பனை செய்த பெண்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதற்கு அவர்கள் ரேஷன் அரிசியை வைத்து சென்றது யார்? என்று தெரியாது எனக்கூறினர். இதையடுத்து அதிகாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்ட உணவுப்பொருள் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சித்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் சென்ற வாலிபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். மூட்டைகளில், ரேஷன் அரிசி இருந்தது.

விசாரணையில், அந்த வாலிபர் துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 31) என்பதும், ரேஷன் அரிசியை சித்தூருக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து மாவட்ட உணவுப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் பாணாவரம் ரெயில் நிலையத்தில் சோதனை செய்தனர். அங்கு சிறு, சிறு மூட்டைகளில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்த ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் பாணாவரம் அருகே உள்ள வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த லட்சுமியை (36) கைது செய்தனர். அவரிடமிருந்து 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story