நகைக்கடை அதிபரை வெட்டி கொள்ளை முயற்சி முன்னாள் கவுன்சிலர் மகனுக்கு வலைவீச்சு


நகைக்கடை அதிபரை வெட்டி கொள்ளை முயற்சி முன்னாள் கவுன்சிலர் மகனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 May 2018 11:00 PM GMT (Updated: 10 May 2018 9:16 PM GMT)

திண்டுக்கல்லில், நகைக் கடை அதிபரை வெட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கோபால்நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 58). அவருடைய மனைவி ராஜாத்தி. இவர்கள், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் அருகே உள்ள குழந்தை வேலப்பன் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். கணவன், மனைவி இருவரும் கடைக்கு சென்று நகை விற்பனையில் ஈடுபடுவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில், ராஜாத்தி அருகில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுவிட்டார். ஜெயராமன் மட்டும் கடையில் இருந்தார். அப்போது, திண்டுக்கல் சவுடம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் மோகன்ராஜ் (28) என்பவர் நகைக்கடைக்கு வந்தார்.

பின்னர், தான் வைத்திருந்த அரிவாளை காட்டி ஜெயராமனை மிரட்டி நகை தரும்படி கேட்டார். ஆனால் அவர் நகையை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மோகன்ராஜ், கடையில் இருந்த நகையை அள்ளி செல்ல முயன்றார். இதனை தடுத்த ஜெயராமனை, மோகன்ராஜ் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் அவருக்கு தலை, முகம், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. ஜெயராமனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் மோகன்ராஜ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். படுகாயம் அடைந்த ஜெயராமன், ரத்த வெள்ளத்தில் கடைக்குள்ளேயே சரிந்து விழுந்தார்.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் ஜெயராமனின் மனைவி, ராஜாத்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மோகன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர். தப்பியோடிய மோகன்ராஜின் தாயார் வசந்தா, மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள கடைக்காரர்களை, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதை மோகன்ராஜ் வழக்கமாக வைத்துள்ளார். தொடர்ந்து அவர் வழிப்பறியிலும் ஈடுபட்டு வந்தார். இவர் மீது வழிப்பறி, கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story