மாகி பள்ளூரில் கலவரம்: பா.ஜ.க.வினர் கடைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கவர்னரிடம் கோரிக்கை


மாகி பள்ளூரில் கலவரம்: பா.ஜ.க.வினர் கடைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கவர்னரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 11 May 2018 10:00 PM GMT (Updated: 11 May 2018 8:23 PM GMT)

மாகி பள்ளூரில் கலவரத்தின் போது பா.ஜ.க.வினர் கடைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கவர்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலம் மாகி பள்ளூரில் கடந்த 7–ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகர் கனிபொழில் பாபு படுகொலை செய்யப்பட்டார். அதே நாளில் கேரளாவை சேர்ந்த பாரதீய ஜனதா பிரமுகர் சம்ஜி என்பவர் கொலை செய்யப்படார். இந்த கொலைகள் அரசியல் போட்டியால் நடந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகரின் இறுதி ஊர்வலத்தின்போது பள்ளூர் பகுதியில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களின் கடைகள், வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் புதுவை மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் செல்வராஜ், மாநில பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன், தேசிய மகளிர் அணி பொதுச்செயலாளர் விக்டோரியா கவுரி ஆகியோர் கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினார்கள்.

அப்போது அவர்கள் கவர்னர் கிரண்பெடியிடம் கூறுகையில், மாகி பகுதியில் போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினார்கள்.


Next Story