தமிழக வாழ்வுரிமை கட்சி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு: மணல் குவாரி அமைய உள்ள இடங்களில் போலீஸ் குவிப்பு


தமிழக வாழ்வுரிமை கட்சி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு: மணல் குவாரி அமைய உள்ள இடங்களில் போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 11 May 2018 10:30 PM GMT (Updated: 11 May 2018 8:46 PM GMT)

நெல்லிக்குப்பம் அருகே அரசு மணல் குவாரி அமைய உள்ள இடங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்ததை தொடர்ந்து, அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே உள்ள மருதாடு, வான்பாக்கம், திருக்கண்டேஸ்வரம் பகுதி தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வான்பாக்கம் கிராமத்தில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் வேல்முருகன் தலைமையில் தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி அமைய உள்ள இடங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்திருந்தனர். பின்னர் மாவட்ட செயலாளர் ஆனந்த், நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரிகள் அமைய உள்ள இடங்களை நேரில் பார்வையிட்டனர். இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவோடு இரவாக நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் 25–க்கும் மேற்பட்ட போலீசார் வான்பாக்கம், மருதநாடு, திருகண்டேஸ்வரம் ஆகிய கிராமங்களில் மணல்குவாரி அமைய உள்ள இடத்தில் குவிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story