பெங்களூரு தனியார் நிறுவன ஊழியர் தண்ணீரில் மூழ்கி சாவு


பெங்களூரு தனியார் நிறுவன ஊழியர் தண்ணீரில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 12 May 2018 5:12 AM GMT (Updated: 12 May 2018 5:12 AM GMT)

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெங்களூரு தனியார் நிறுவன ஊழியர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

பென்னாகரம்,

பெங்களூரு விநாயகா நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருடைய மகன் அபி (வயது 18). இவர் அங்குள்ள தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் நண்பர்கள் 4 பேருடன் காரில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் 5 பேரும் கோத்திக்கல் என்ற இடத்திற்கு சென்று காவிரி ஆற்றில் குளித்தனர்.

அப்போது அபி திடீரென காவிரி ஆற்றில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் பரிசல் ஓட்டிகள், மீனவர்கள் உதவியுடன் வாலிபரை தேடியும் காணவில்லை. இருள் சூழ்ந்து விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் வாலிபரை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டனர். பரிசல் ஓட்டிகள், மீனவர்கள் கோத்திக்கல் பகுதியில் வாலிபர் அபியை தேடினர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த அபியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு வாலிபரின் உடலை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story