தெற்கு ரெயில்வே அறிவிப்பு: கொல்லம்–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும்


தெற்கு ரெயில்வே அறிவிப்பு: கொல்லம்–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும்
x
தினத்தந்தி 13 May 2018 10:30 PM GMT (Updated: 13 May 2018 7:02 PM GMT)

கொல்லம் தாம்பரம் இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்,

தற்போது கொல்லம்– தாம்பரம் இடையே வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் சென்னை தாம்பரத்தில் இருந்தும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்தும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுகிறது.

இந்த ரெயிலை தினசரி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து வேளாங்கண்ணிக்கு கொல்லம், செங்கோட்டை, விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும். கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து புனலூர் வரை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லைவரை நீட்டிக்கப்படும். கொல்லத்திலிருந்து தூத்துக்குடி வரை பயணிகள் ரெயில் இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

கொல்லம்–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி ரெயிலாக இயக்கப்படும் என அறிவித்துள்ள தெற்கு ரெயில்வே அதற்கான தேதி பற்றி குறிப்பிடவில்லை. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 27–ந்தேதி முதல் நெல்லை–தாம்பரம் இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என அறிவித்த தெற்கு ரெயில்வே நிர்வாகம் தொழில்நுட்ப காரணங்களால் அதனை திடீரென ரத்து செய்வதாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தற்போது அறிவித்துள்ள ரெயில்கள் எந்த தேதியிலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பதுடன் அதற்கான கால அட்டவணையையும் ரெயில்வே நிர்வாகம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் தற்போது அறிவித்துள்ளபடி இந்த ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர வழக்கம்போல் இவற்றையும் ரத்து செய்துவிட கூடாது என வலியுற்த்தப்பட்டுள்ளது.


Next Story