கூடலூர் அருகே விவசாயி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை


கூடலூர் அருகே விவசாயி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 13 May 2018 10:15 PM GMT (Updated: 13 May 2018 7:12 PM GMT)

கூடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை விவசாயி வீட்டை சேதப்படுத்தியது. அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் பெண் காயம் அடைந்தார்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கடந்த 1 வாரமாக பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் கோடை வறட்சி நீங்கி பசுமை திரும்பி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வனத்தில் பசுந்தீவனம், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அவைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தின.

கூடலூரில் பலாப்பழ சீசன் களை கட்ட தொடங்கி உள்ளதால் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்கு செல்லாமல் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. கூடலூர் அருகே பாடந்தொரை பகுதியில் கடந்த 2–ந் தேதி இரவு வாலிபர் ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றது. தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானை முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பாடந்தொரை அருகே அங்கன்கல்லேரி பகுதியில் காட்டு யானை ஒன்று நுழைந்தது. பின்னர் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி குஞ்சு கிருஷ்ணன் (வயது 41) என்பவரது வீட்டை காட்டு யானை இடித்து சேதப்படுத்தியது. இரவு காவல் பணிக்காக குஞ்சு கிருஷ்ணன் தனது தோட்டத்துக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது குடும்பத்தினர் இருந்தனர். அப்போது காட்டு யானை வீட்டை சேதப்படுத்தும் போது குஞ்சு கிருஷ்ணனின் மனைவி மாலதி (37) மீது தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் காயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் அப்பகுதி மக்கள் காட்டு யானையை விரட்டியடித்தனர்.

இதேபோல் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரோட்டுப்பாறை பகுதியில் மற்றொரு காட்டு யானை முகாமிட்டு அப்பகுதியில் வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இதில் பாக்கியராஜ், ராஜி, அன்பரசு, ராஜேந்திரன் ஆகிய விவசாயிகளின் 200–க்கும் மேற்பட்ட பாக்கு, வாழைகள் நாசமானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதனால் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story