அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகைகள், பணம் திருட்டு


அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகைகள், பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 May 2018 10:45 PM GMT (Updated: 13 May 2018 8:38 PM GMT)

திருக்குவளையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் திருக்குவளை அகரவெளி பகுதியை சேர்ந்தவர் சோமு(வயது64). இவர் திருக்குவளை தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நாகலட்சுமி கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக திருவாரூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் நாகலட்சுமியை பார்க்க சோமு வீட்டை பூட்டிவிட்டு திருவாரூருக்கு சென்றுவிட்டார். நேற்று காலை இவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் சோமுவின் உறவினர் ராதிகா என்பவர் சோமுவின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது.

ராதிகா இதுகுறித்து சோமுவுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வீட்டுக்கு சோமு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 32 பவுன் நகைகள், ரூ.6 ஆயிரத்து 500 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். நாகையில் இருந்து கைரேகை நிபுணர் கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

நாகையில் இருந்து மோப்பநாய் துலிப் வரவழைக்கப் பட்டது. மோப்ப நாய் வீட்டின் பின்புறமாக அருகில் உள்ள மின்சார நிலையம் மற்றும் மெயின்ரோடு வழியாக காருகுடி பஸ் நிலையம் வரை சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இது குறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடி சென்றவர்களை தேடி வருகிறார்கள்.


Next Story