திருச்சியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மீண்டும் தண்ணீர் தேங்கியது


திருச்சியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மீண்டும் தண்ணீர் தேங்கியது
x
தினத்தந்தி 13 May 2018 11:00 PM GMT (Updated: 13 May 2018 9:30 PM GMT)

திருச்சியில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மீண்டும் தண்ணீர் தேங்கியது.

திருச்சி,

திருச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் கொட்டித்தீர்த்த இந்த கோடை மழையினால் அக்னி நட்சத்திர வெயிலின் உக்கிரம் தணிந்து தரை குளிர்ந்தது. நகரில் பல இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. திருச்சி மேலப்புதூர் சுரங்கப்பாதையில் சுமார் ஐந்தடி உயரத்திற்கு தேங்கி நின்ற தண்ணீரில் அரசு டவுன் பஸ் சிக்கியது. அந்த தண்ணீர் வடிவதற்கு இரண்டு நாட்கள் ஆனதால் போக்குவரத்து மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டது.

இந்நிலையில் திருச்சியில் கடந்த 2 நாட்களாக வெயில் கொளுத்தியது. வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருந்ததால் மக்கள் பகலில் வெளியில் நடமாட முடியாமல் கடும் அவதிப்பட்டனர். நேற்றும் காலையில் இருந்தே வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது.

இந்நிலையில் மாலை 4.30 மணி அளவில் திடீர் என வானில் கருமேகங்கள் திரண்டன. சூறைக்காற்றும் வீசியது. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. லேசான தூறலாக தொடங்கி சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் திருச்சி நகரின் பல இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

மேலப்புதூர் சுரங்கப்பாதையும் இதில் இருந்து தப்ப முடியவில்லை. 30 நிமிடம் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் நேற்று மீண்டும் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடியே சென்றன. ஆனால் மழை அதிக நேரம் நீடிக்காததால் தண்ணீர் வடிய தொடங்கியது. இதனால் வாகனங்கள் எந்தவித சிரமமும் இன்றி சுரங்கப்பாதை வழியாக சென்றன.

சோமரசம்பேட்டை பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் சிறிது நேரம் மழை பெய்தது. அப்போது அதவத்தூர் மேலத்தெருவை சேர்ந்த பனையடியானுக்கு சொந்தமான பசு ஒன்று மின்னல் தாக்கியதில் பரிதாபமாக செத்தது. இது குறித்து தகவல் அறிந்த அதவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ரேணுகா மற்றும் கால்நடை மருத்துவர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பசுவின் உடலை பார்வையிட்டனர். 

Next Story