கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி துணை நடிகையை கடத்திச் சென்று 3 பேர் பாலியல் பலாத்காரம்: குன்றத்தூர் போலீசில் பரபரப்பு புகார்


கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி துணை நடிகையை கடத்திச் சென்று 3 பேர் பாலியல் பலாத்காரம்: குன்றத்தூர் போலீசில் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 14 May 2018 10:30 PM GMT (Updated: 14 May 2018 9:59 PM GMT)

கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி காரில் கடத்திச் சென்று 3 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குன்றத்தூர் போலீசில் சினிமா துணை நடிகை பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.

பூந்தமல்லி,

சென்னை போரூர் சக்தி நகர், 5–வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கல்பனா(வயது 24).(பெயர் மாற்றப்பட்டுள்ளது) சினிமா துணை நடிகையான இவர், தமிழ் திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர், கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்த நிலையில் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் ஒரு புகார் மனு அளித்து உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–

கடந்த சில தினங்களுக்கு முன்பு குமார் என்பவர் எனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். தான் சினிமா தயாரிப்பாளரிடம் பணி புரிந்து வருகிறேன். புதிதாக எடுக்கும் படத்தில் உங்களை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்து உள்ளோம்.

தற்போது சினிமா தயாரிப்பாளர் சென்னை வந்து உள்ளதால் அவரிடம் நேரில் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்து விடுகிறேன் என்றும், போரூர் சிக்னல் அருகே வந்தால் காரில் அழைத்து செல்வதாகவும் கூறினார்.

அதை உண்மை என்று நம்பி அன்று இரவு நான் போரூர் சிக்னல் அருகே காத்திருந்தேன். அப்போது அங்கு காரில் வந்த ஒருவர், தன்னை குமார் என்று என்னிடம் அறிமுகம் செய்தார். பின்னர் அவருடன் காரில் என்னை ஏற்றிச் சென்றார்.

எங்களுக்கு பின்னால் காரை பின்தொடர்ந்தபடி மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றனர்.

வீட்டின் உள்ளே சென்றதும் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களுடன் சேர்ந்து 3 பேரும் திடீரென கத்தியை காட்டி மிரட்டி என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர் என்னிடம் இருந்த செல்போன், நகைகள், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். இதுகுறித்து வெளியே சொன்னாலோ, போலீசில் புகார் அளித்தாலோ பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம். அதன் பிறகு தேடி வந்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். அவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

குன்றத்தூர் போலீசார் அந்த துணை நடிகைக்கு வந்த செல்போன் எண், அந்த நபர்களின் அடையாளம், கார் பதிவெண் ஆகியவற்றை வைத்து 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த புகாரின் உண்மை தன்மை குறித்தும் துணை நடிகையிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story