ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு


ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 14 May 2018 10:45 PM GMT (Updated: 14 May 2018 10:09 PM GMT)

ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் சுட்டகுண்டா கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அக்கிராமத்திற்கு வந்த அரசு டவுன் பஸ்சை காலி குடங்களுடன் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரணாம்பட்டு ஒன்றிய அதிகாரிகளும், உமராபாத் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story