திருச்செந்தூர், விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்


திருச்செந்தூர், விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்
x
தினத்தந்தி 15 May 2018 8:30 PM GMT (Updated: 15 May 2018 3:27 PM GMT)

திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் தாலுகாக்களில் நேற்று தொடங்கிய ஜமாபந்தியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் தாலுகாக்களில் நேற்று தொடங்கிய ஜமாபந்தியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. உதவி கலெக்டர் தங்கவேலு தலைமை தாங்கினார். இதில் பரமன்குறிச்சி, குதிரைமொழி, செம்மறிக்குளம், நங்கைமொழி, மெஞ்ஞானபுரம், மானாடு தண்டுபத்து, லட்சுமிபுரம் பகுதி கிராம மக்கள் கலந்து கொண்ட மனு அளித்தனர். இதில் பட்டா மாற்றம் கேட்டு 26 மனுக்கள், நிலஅளவை தொடர்பாக 72 மனுக்கள், வாரிசு மற்றும் சான்றுகள் தொடர்பாக 2 மனுக்கள், முதியோர் உதவி தொகை 22, இலவச வீட்டுமனைபட்டா 3, ஆக்கிரமிப்பு தொடர்பாக 1 மனுவும், பொது வினியோகம் தொடர்பாக 2 மனுக்கள் உள்பட மொத்தம் 130 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், திருச்செந்தூர் தாசில்தார் தில்லைபாண்டி, மண்டல துணை தாசில்தார் கோமதிசங்கர், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் தாலுகாவில் ஜமாபந்தி வரும் 25–ந்தேதி வரை நடக்கிறது.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இதில் தூத்துக்குடி உதவி ஆணையர் (ஆயம்) விஜயா தலைமை தாங்கினார். நேற்று புதூர் குறுவட்டத்தில் உள்ள 9 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு குறைகள் குறித்து மனுக்கள் கொடுத்தனர். இதில் 77 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் நடவடிக்கைக்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் விளாத்திகுளம் தாசில்தார் லெனின், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராமசுப்பு, மண்டல துணை தாசில்தார் வசந்தமல்லிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்றும்(புதன்கிழமை) அந்த அலுவலகத்தில் பல கிராம மக்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.


Next Story