பலத்த காற்றுடன் மழை; 4 மின்கம்பங்கள் சாய்ந்தன மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதி


பலத்த காற்றுடன் மழை; 4 மின்கம்பங்கள் சாய்ந்தன மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 15 May 2018 10:30 PM GMT (Updated: 15 May 2018 9:29 PM GMT)

எருமப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது 4 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதிகளிலும் மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இடி, மின்னல், பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதேபோல் எருமப்பட்டி, புதுக்கோட்டை, பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் 4 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் ஒரு மின்கம்பம் ஒடிந்து விழுந்தது. இதையடுத்து அந்த பகுதியில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

ஓடுகள் பறந்தன

பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள பொன்னேரி கிராமத்தில் பரமநாதன் (வயது 44) என்பவரது வீட்டில் உள்ள ஒடுகள் பலத்த காற்றில் தூக்கிவீசப்பட்டு பறந்து போய் விழுந்தன. வீட்டில் இருந்தவர்கள் திருவிழாவுக்காக வெளியே சென்று விட்டதால் காயம் இன்றி தப்பினர். பரமநாதன் வீட்டின் முன்பகுதியில் படுத்து இருந்தார். இதனால் அவருக்கு காயம் ஏற்படவில்லை.

பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைபட்டாலும் சில இடங்களில் சரிசெய்யப்பட்டது. மீதமுள்ள மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எருமப்பட்டி பகுதியில் அரைமணிநேரம் பெய்த பலத்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story