குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 18 மின் மோட்டார்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 18 மின் மோட்டார்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 May 2018 10:45 PM GMT (Updated: 15 May 2018 9:31 PM GMT)

பேராவூரணி பகுதியில் குடிநீர் உறிஞ்ச பயன் படுத்திய 18 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட 11, 12-வது வார்டுகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று முறையிட்டனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் அண்ணாதுரை உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் நேற்று காலை பேரூராட்சி தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் தலைமையில் குடிநீர் திட்ட பணியாளர்கள் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் எஸ்.பி.ஜி. சர்ச்ரோடு, ஆர்.சி.சர்ச் ரோடு, கருப்பமனை மெயின்ரோடு, காமான்டி கோவில், வீமநாயகி அம்மன் கோவில் தெரு, மேலத்தெரு, கிழக்குதெரு உள்ளிட்ட 11, 12-வது வார்டுகளில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர்.

இதில் குடிநீர் குழாய் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு, மின்மோட்டாரைப் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சுவதும், தோட்டங்கள் மற்றும் தென்னந்தோப்புகளுக்கு குடிநீர் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு 18 மின் மோட்டார்கள் மற்றும் தோட்டங்களுக்கு தண்ணீர் குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) மு.பொன்னுசாமி கூறியதாவது:-

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, தடையின்றி சீராக குடிநீர் வினியோகம் செய்ய பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சுவது சட்டப்படி குற்றம். மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story