மணலூர்பேட்டை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


மணலூர்பேட்டை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 16 May 2018 10:30 PM GMT (Updated: 16 May 2018 6:45 PM GMT)

திருவண்ணாமலையில் மணலூர்பேட்டை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகள், கடைகள் கட்டி சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். பல ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மணலூர்பேட்டை சாலையில் (பஸ் நிறுத்தம் சந்திப்பில் இருந்து) கியாஸ் கம்பெனி வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தொலைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஆக்கிரமிப்பின் போது சில இடங்களில் கடைக்காரர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் கால்வாய் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை முன்னிட்டு ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் பஸ் நிறுத்தம் சந்திப்பில் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.

Next Story