கொத்தமங்கலத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


கொத்தமங்கலத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 May 2018 10:45 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

கொத்தமங்கலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கீரமங்கலம்,

கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் கடந்த ஆண்டு மே 20-ந்தேதி வரை 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. அந்த 2 கடைகளையும் அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் மனு கொடுத்தும், கடைகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் ஒரு மாதத்தில் கடைகள் அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் சமாதான பேப்பரில் கையெழுத்து போடாமல் செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்த பெண்கள் அந்த 2 டாஸ்மாக் கடைகளையும் அடித்து உடைத்தனர். அதன் பிறகு சிறிது நேரத்தில் 2 கடைகளும் நிரந்தரமாக அகற்றப்படுவதாகவும், இனிமேல் கொத்தமங்கலம் கிராம எல்லைக்குள் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படமாட்டாது என்றும் உறுதி அளித்தனர். அதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் தற்போது கொத்தமங்கலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் இந்திராணி, மாவட்ட தலைவர் பூமதி, தே.மு.தி.க., மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கூடி டாஸ்மாக்கடை திறக்கக் கூடாது என கூறி போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதுகுறித்து அறிந்த கீரமங்கலம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தனர்.

இருப்பினும் அங்கிருந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் புதிய கடை திறப்பதை நிறுத்திக் கொள்வதுடன், கடைவீதியில் உள்ள பெட்டிக்கடைகள் உள்பட 10 இடங்களுக்கு மேல் மது விற்பனை நடக்கிறது. அதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து மீண்டும் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 3 நாட்களுக்குள் கொத்தமங்கலத்தில் எந்த இடத்திலும் மது விற்பனை நடக்காமல் தடுக்கிறோம் என்று போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story