அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
தினத்தந்தி 16 May 2018 10:00 PM GMT (Updated: 16 May 2018 8:19 PM GMT)

அனகாபுத்துரில், அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம்,

வெள்ள பாதிப்பை தொடர்ந்து, அடையாறு ஆற்றின் கரையையொட்டி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வருவாய் துறையினர், ‘பயோ மெட்ரிக்’ முறையில், அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றையொட்டி அமைந்துள்ள காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், டோபிகானா, தாய்மூகாம்பிகை நகர், சாந்தி நகர் ஆகிய பகுதிகளில் 804 ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரம் காட்டினர். ஆக்கிரமிப்பாளர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம், ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு வசித்தவர்களை பெரும்பாக்கத்திற்கு அனுப்பும் பணி தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

அதன்பின், கால அவகாசம் கேட்கப்பட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் மீண்டும் அங்கு வந்தனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.


Next Story