தோல் பொருள் தொழிற்சாலையில் தீ விபத்து தொழிலாளி உடல் கருகி சாவு


தோல் பொருள் தொழிற்சாலையில் தீ விபத்து தொழிலாளி உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 16 May 2018 9:17 PM GMT (Updated: 16 May 2018 9:17 PM GMT)

வசாயில் தோல் பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு, சட்டோலி பகுதியில் சவுத்ரி தோல் பை, காலணி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தொழிற்சாலை காவலாளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்கள், 2 ராட்சத தண்ணீர் டேங்கர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் தொழிற்சாலையின் உள்ளே சென்று பார்த்தபோது, உடல் கருகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மீட்கப்பட்டவர் தொழிற்சாலை தொழிலாளி ஜாவித்(வயது40) ஆவார். தொழிற்சாலை தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story