போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2018 10:00 PM GMT (Updated: 17 May 2018 7:23 PM GMT)

மதுராந்தகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த முருகம்பாக்கத்தை சேர்ந்தவர் கிளியம்மாள் (வயது 60). இவருக்கு தயாளன், ரவிக்குமார் என 2 மகன்களும், சுமதி என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. கிளியம்மாளின் கணவர் தற்போது இல்லை.

கிளியம்மாளுக்கு சுமார் 1 ஏக்கர் நிலம் உள்ளதாக தெரிகின்றது. இதனை ரவிக்குமார் மட்டும் அனுபவித்ததாகவும் மற்றொரு மகன் மகளுக்கு பங்கு தரவில்லை என்று தகராறு ஏற்பட்டு இது சம்பந்தமாக கிளியம்மாள் மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் இருதரப்பினருக்கும், பேச்சுவார்த்தை நடத்தியபோது கிளியம்மாள் தரப்பினருக்கும் தயாளன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது ரவிக்குமார் மனைவி காந்தாமணியின் அண்ணன் பன்னீர்செல்வத்தை மதுராந்தகம் அடுத்த முன்னுத்திகுப்பத்தை சேர்ந்த ஜெய் என்ற ஜெயச்சந்திரன் ஊரப்பாக்கத்தை சேர்ந்த வீரபத்திரன் என்பவரது மகன் தயாளன் (45), காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சபரி, சந்தோஷ் ஆகியோர் தாக்கியதாக மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் பன்னீர்செல்வம் புகார் அளித்தார். பன்னீர் செல்வம் மானாமதி போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வருகிறார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து தயாளன், ஜெய் ஆகியோரை கைது செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சபரி, சந்தோஷ் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story