குடும்பத்தகராறில் பயங்கரம்: கிரைண்டர் கல்லால் தாக்கி பெண் படுகொலை கணவர் கைது


குடும்பத்தகராறில் பயங்கரம்: கிரைண்டர் கல்லால் தாக்கி பெண் படுகொலை கணவர் கைது
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 9:46 PM GMT)

சேலம் அருகே குடும்பத்தகராறில் கிரைண்டர் கல்லால் தாக்கி பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

கொண்டலாம்பட்டி,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 38). இவர்களுக்கு ரோகித் (7), ஸ்ரீதர்(4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இதில் ரோகித் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். சரவணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் பெற்று சொந்தமாக லாரி ஒன்று வாங்கி அதை வாடகைக்கு விட்டு இருந்தார். ஆனால் அதன் மூலம் கடனை அடைக்க போதுமான அளவு பணம் கிடைக்கவில்லை என தெரிகிறது.

இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்படவே சரவணன் அந்த லாரியை விற்று கடன்களை அடைத்து விட்டார். பின்னர் பிழைப்பு தேடி அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் கொண்டலாம்பட்டி அருகே நெய்காரப்பட்டியில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்தார். பின்னர் சரவணன் அவருடைய அக்காள் வீட்டின் அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து சரவணன் டி.வி. மெக்கானிக் வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே கடந்த ஒரு மாதமாக அவர் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சரவணன், பரமேஸ்வரி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லால் மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பரமேஸ்வரியின் மண்டை உடைந்து ரத்தம் வழிய கீழே சரிந்து விழுந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அப்போது வீட்டில் இருந்த சிறுவன் ஸ்ரீதர், தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு கதறி அழுதான்.

இந்த கொலை குறித்து அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பரமேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அருகே குடும்பத்தகராறில் கிரைண்டர் கல்லால் தாக்கி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story