கரூர் மாவட்டத்தை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது


கரூர் மாவட்டத்தை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 18 May 2018 11:40 PM GMT (Updated: 18 May 2018 11:42 PM GMT)

கரூர் மாவட்டத்தை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்,

கரூர் மாவட்டத்தை கலக்கிய வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 19.5 பவுன் நகை மற்றும் 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகையை வழிப்பறி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. மேலும் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களும் அடிக்கடி நடந்ததால் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தான் கூட்டாக இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதையடுத்து வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில், கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பிரித்திவிராஜ் (கரூர் டவுன்), செந்தில்குமார் (வாங்கல்), சந்திரசேகரன் (பசுபதிபாளையம்) உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், நகை பறிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரித்த போது கிடைத்த தகவலின் பேரில் துப்பு துலக்கினர்.

விசாரணையில் கரூர் மாவட்டத்தின் பல பகுதியிலும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டது, கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் டி.வெங்கடாபுரம் புது மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மகேந்திரன்(வயது 30), அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பில்லாக்குறிச்சியை சேர்ந்த குணசேகரன்(38), தஞ்சாவூர் கும்பகோணம் செம்போடம் வீதியை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் வெற்றிமுரசு(22), வெங்கமேடு என்.எஸ்.கே. நகரை சேர்ந்த ஞானவேல்(41) மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 5 பேர் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் மீது வழிப்பறி, வாகனதிருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸ் நிலையங்களில் வழக்கு இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 19½ பவுன் நகை, 12 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் மகேந்திரன், குணசேகரன், வெற்றிமுரசு, ஞானவேல் உள்பட 5 பேர் மீதும் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டியவர்களை நுட்பமாக செயல்பட்டு கண்டு பிடித்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி வெகுமதி அளித்தார்.

Next Story