காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை


காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை
x
தினத்தந்தி 19 May 2018 12:14 AM GMT (Updated: 19 May 2018 12:14 AM GMT)

தேனி அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் மனம் உடைந்த மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தேனி,

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்தவர் நல்ராஜ் (வயது 58). இவருடைய மகன் மணிபெருமாள் (25). இவர், தேனியில் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.

மணிபெருமாள் தனது உறவினர் ஒருவரின் மகளை காதலித்துள்ளார். அவரையே திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். இந்த காதல் விவகாரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்து, தான் காதலிக்கும் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார்.

அதற்கு அவருடைய உறவினர்கள் கொஞ்சம் காலம் காத்திருக்குமாறும், பெண் வீட்டில் பேசித் தான் முடிவு எடுக்க முடியும் என்பதால் உடனே முடிவு எடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாதோ என்ற மன வருத்தத்தில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மணிபெருமாள் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது தங்கையின் சுடிதார் துப்பாட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்ததும் அவருடைய குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர், மணிபெருமாள் இறந்து விட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை நல்ராஜ் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story