எட்டயபுரத்தில் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் கைவரிசை: நகைக்கடையில் 100 பவுன் நகைகள் கொள்ளை


எட்டயபுரத்தில் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் கைவரிசை: நகைக்கடையில் 100 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 19 May 2018 9:30 PM GMT (Updated: 19 May 2018 12:29 PM GMT)

எட்டயபுரத்தில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 100 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

எட்டயபுரம், 

எட்டயபுரத்தில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 100 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

நகைக்கடை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெரிய கிணற்று தெருவைச் சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் வெங்கடேஷ் ராஜா (வயது 40). இவர் எட்டயபுரம் பஜாரில் அரசு ஆஸ்பத்திரி எதிரில் விஜயலட்சுமி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் எட்டயபுரம் வர்த்தக சங்க துணை தலைவராகவும் உள்ளார்.

இவரது நகைக்கடையானது எட்டயபுரத்தைச் சேர்ந்த மூக்கையாவுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் தரைத்தளத்தின் முன்பகுதியில் நகைக்கடை, பாத்திரக்கடை, செல்போன் கடை, செருப்பு கடை உள்ளது. வணிக வளாக தரைத்தளத்தின் பின்பகுதியில் 3 தங்கும் அறைகளும், மாடியில் 3 தங்கும் அறைகளும் உள்ளன.

முன்பகுதியில் உள்ள கடைகளுக்கும், பின்பகுதியில் உள்ள தங்கும் அறைகளுக்கு இடையில் பொது சுவர் ஒன்று உள்ளது. இந்த தங்கும் அறைகளை தினசரி வாடகைக்கு விட்டு வந்தனர். ஆனால் தற்போது அதில் யாரும் தங்கவில்லை. வணிக வளாகத்தில் இரவுநேரத்தில் காவலாளி ஒருவர் மட்டுமே உள்ளார்.

சுவரில் துளையிட்டு...

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வணிக வளாகத்தின் முன்பகுதியில் காவலாளி பணியில் இருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், வணிக வளாகத்தில் நகைக்கடைக்கு பின்புறம் உள்ள தங்கும் அறையின் கதவை திறக்க முயன்றனர். அறையின் கதவின் மேல்புறம் சிறிய இடைவெளியில் இரும்பு தடுப்பு கம்பி உள்ளது. அதன் வழியாக மர்மநபர்களில் ஒருவர் கையை உள்ளே விட்டு, கதவின் தாழ்ப்பாளை திறந்தார்.

கதவின் அடியில் தாழ்ப்பாள் போடாத நிலையில் இருந்ததால், கதவை தள்ளியவுடன் திறந்தது. அதன் வழியாக உள்ளே சென்ற மர்மநபர்கள், தங்கும் அறையின் உள்பக்கமாக கதவை பூட்டி கொண்டனர். பின்னர் அவர்கள், தங்கும் அறைக்கும், நகைக்கடைக்கும் இடையில் உள்ள பொது சுவரில் துளையிட்டனர். அதன் வழியாக மர்மநபர்கள் நகைக்கடையின் குடோனுக்குள் நுழைந்தனர்.

100 பவுன் கொள்ளை

நகைக்கடையின் முன்பகுதியில் அலமாரிகளும், பின்பகுதியில் குடோனும் உள்ளது. தினமும் இரவில் நகைக்கடையை வெங்கடேஷ் ராஜா பூட்டும்போது, அலமாரிகளில் உள்ள நகைகளை எடுத்து, குடோனில் உள்ள பெரிய இரும்பு பெட்டிக்குள் வைத்து பூட்டிச் செல்வது வழக்கம்.

நகைக்கடை குடோனுக்குள் நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த பெரிய இரும்பு பெட்டியை கியாஸ் வெல்டிங் மூலம் வெட்டி திறந்தனர். பின்னர் அவர்கள், அதில் இருந்த 100 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

மேலும் அதன் அருகில் உள்ள இரும்பு பீரோவையும் உடைத்து திறந்தனர். ஆனால் அதில் வரவு–செலவு கணக்கு புத்தகங்கள் மட்டுமே இருந்தன. தொடர்ந்து நகைக்கடையில் இருந்த 3 கண்காணிப்பு கேமராக்கள், குடோனில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமரா, ஹார்டு டிஸ்க், எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றையும் மர்மநபர்கள் எடுத்துச் சென்றனர்.

போலீசார் விசாரணை

நேற்று காலையில் காவலாளி, வணிக வளாகத்தின் பின்பக்கத்தில் உள்ள தங்கும் அறை திறந்து கிடந்ததையும், அங்கிருந்த பொதுச்சுவரில் துளையிடப்பட்டதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், நகைக்கடை உரிமையாளர் வெங்கடேஷ் ராஜாவுக்கு தகவல் தெரிவித்தார். உடனே வெங்கடேஷ் ராஜா அங்கு வந்து பார்வையிட்டு, இதுகுறித்து எட்டயபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராம், விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஞானசம்பந்தன், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்–இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த இடத்தில் பதிவான கைரேகைகள், தடயங்களை தூத்துக்குடி கைரேகை துணை போலீஸ் சூப்பிரண்டு நாகரத்தினம் பதிவு செய்தார்.

மேலும், போலீஸ் மோப்ப நாய் ‘தியா‘ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த நகைக்கடையில் மோப்பம் பிடித்து, பஜாரில் தெற்கு பகுதி வழியாக பாண்டியன் கிராம வங்கி வரையிலும் ஓடிச் சென்று விட்டு, மீண்டும் நகைக்கடைக்கு திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளையர்களை பிடிப்பதற்காக 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பரபரப்பு

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எட்டயபுரம் பஜாரில் ஆறுமுகம் என்பவரது நகைக்கடையில் ‌ஷட்டரின் பூட்டை உடைத்து, அலமாரியில் இருந்த 60 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அந்த வழக்கில் கொள்ளையர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், எட்டயபுரத்தில் மீண்டும் நகைக்கடையில் சுவரை துளையிட்டு 100 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story