பல்கலைக்கழக கல்லூரிகளில் கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்


பல்கலைக்கழக கல்லூரிகளில் கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 May 2018 8:30 PM GMT (Updated: 19 May 2018 2:33 PM GMT)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

நெல்லை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் திருமலை நம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–

கல்வி கட்டணம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் மனோ கல்லூரி மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

இதன் கீழ் நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில், சேரன்மாதேவி கோவிந்தபேரி, பணகுடி, திசையன்விளை, கடையநல்லூர், புளியங்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம், நாகம்பட்டி, சாத்தான்குளம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கல்லூரி என மொத்தம் 10 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகள் பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. வருகிற 2018–19ம் கல்வி ஆண்டுக்கு பி.காம், பி.பி.ஏ., பி.எஸ்.சி. கணிதம், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய இளநிலை படிப்புகளுக்கு ரூ.8,425, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.7,125, பி.எஸ்.சி. கணினி அறிவியல் பிரிவுக்கு ரூ.10 ஆயிரத்து 425, ஆதிதிராவிடர்–பழங்குடியினருக்கு ரூ.9,125 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதுதவிர முதுநிலை படிப்புகளுக்கு ரூ.12 ஆயிரத்து 225, ஆதிதிராவிடர்–பழங்குடியினருக்கு ரூ.10 ஆயிரத்து 625 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

திரும்ப பெற வேண்டும்

இந்த கட்டணம் தனியார் சுயநிதி கல்லூரிகளை விட அதிகம் ஆகும். எனவே உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுவதும் திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் அனைத்து மனோ கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரிகளில் போராட்டம் நடத்தப்படும். பல்கலைக்கழகத்திலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.


Next Story