மோட்டார் சைக்கிள் மோதல்: மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மோதல்: மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 May 2018 10:15 PM GMT (Updated: 19 May 2018 7:43 PM GMT)

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி, பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

ஆவடி,

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை பகுதியை சேர்ந்தவர் ஞானபிரம்மராஜ் (வயது 31). ஆன்-லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ஞானபிரம்மராஜ், ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியில் வசிக்கும் தனது நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார்.

பாலவேடு அருகே மேம்பாலத்தில் வேகமாக செல்லும்போது, எதிர்பாராதவிதமாக பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் ஞானபிரம்மராஜ், சுமார் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இரவு நேரம் என்பதால் அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடப்பதை யாரும் கவனிக்கவில்லை.

நேற்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள், ஞானபிரம்மராஜ் இறந்து கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ஞானபிரம்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story