நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர் வைகோ கண்டனம்


நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர் வைகோ கண்டனம்
x
தினத்தந்தி 19 May 2018 11:00 PM GMT (Updated: 19 May 2018 9:32 PM GMT)

நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து என்னை பற்றி அவதூறு செய்தி பரப்பி வருகின்றனர். இதனால் ம.தி.மு.க. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் எடியூரப்பா மிக குறைந்த நாட்கள் முதல்வராக இருப்பார் என நான் கூறியது நிறைவேறியுள்ளது. 56 மணி நேரம் முதல்வராக இருந்து ராஜினாமா செய்துள்ளார். பா.ஜனதா கட்சியின் குதிரை பேர அரசியலுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தென்னிந்தியாவில் பா.ஜனதா காலூன்றி விடலாம் என்ற மோடியின் எண்ணம் நிறைவேறாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறாது.

கொள்ளிடம் ஆற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மணல் குவாரி செயல்பட்டுள்ளது. இதில், 3 அடிக்கு பதிலாக 30 அடி ஆழம் வரை மணல் எடுத்ததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி மக்கள் மணல் குவாரி அமைக்க கூடாது என்று அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு மணல் குவாரி அமைப்பதை கைவிட வில்லை என்றால் இப்பகுதி மக்களை திரட்டி நாங்களும் சேர்ந்து பெரிய போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு வைகோ கூறினார்.

பினனர் நிருபர்கள் திருச்சியில் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும், ம.தி.மு.க. கட்சி தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து வைகோவிடம் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தபோது, “தி.மு.க., அ.தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்து வந்துள்ளேன். ஆனால் ஒரு நாளும் எனக்கு எதிராக இவ்வகையான பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து என்னைப்பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். எனினும் அதை பற்றி எனக்கு கவலையில்லை. ம.தி.மு.க. தொண்டர்கள் அமைதி காக்கவேண்டும்” என்றார்.

முன்னதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சினையில் நான் கூறியபடி நடந்து விட்டது. மத்திய அரசின் தந்திரத்துக்கும், சூழ்ச்சிக்கும் தமிழக அரசு பலியாகிவிட்டது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி, அப்போது இருந்த வி.பி.சிங் அரசு நடுவர் நீதிமன்றத்தை அமைத்தது. அந்த நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நமக்கு முழுமையான நீதி கிடைக்காவிட்டாலும் ஒரு பாதுகாப்பு கிடைத்தது. அந்த பாதுகாப்பும் இப்போது இல்லாமல் போய்விட்டது.

இப்போது அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் அந்த பாதுகாப்பு இல்லை. இப்போது கூறப்பட்டுள்ள தீர்ப்பின்படி கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டிக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. தன் அதிகாரம் என்ற பகுதியை முழுமையாக எடுத்து விட்டார்கள்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும், இப்போது ஆணையத்துக்காக அமைக்கப்பட உள்ள குழுவையும் ஒப்பிட்டு பார்த்தால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு இருப்பது தெரியவரும். காவிரி தீர்ப்பால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை. இது தெரியாமல் தமிழக அரசு தீர்ப்பை வரவேற்பதோடு, தமிழக மக்களையும் ஏமாற்றி கொண்டு இருக்கிறது.

காவிரி வழக்கில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் உரிமையை நிலை நாட்ட தவறி விட்டனர். கர்நாடகாவில் புதிய அணைகளை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. புதிய அணைகள் கட்டப்பட்டு விட்டால் வெள்ள காலங்கள் தவிர மற்ற நேரங்களில் தமிழகத்துக்கு தண்ணீர் வராது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story