எடியூரப்பாவின் ராஜினாமா ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி சித்தராமையா பேட்டி


எடியூரப்பாவின் ராஜினாமா ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 19 May 2018 10:46 PM GMT (Updated: 19 May 2018 10:46 PM GMT)

முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக அரசியலில் இது வரலாற்று நிகழ்வு. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. அரசியல் சாசனத்திற்கு கிடைத்த வெற்றி. பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தபோதும் கவர்னர் வஜூபாய் வாலா, பா.ஜனதா ஆட்சிக்கு அனுமதி வழங்கினார். இது ஜனநாயக படுகொலை ஆகும்.

ஜனநாயகத்தில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்க வேண்டும். பா.ஜனதாவுக்கு முழு பெரும்பான்மையை மக்கள் வழங்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மக்கள் தீர்ப்புக்கு எதிராக நடந்து கொண்டனர். பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாட்கள் வேண்டும் என்று எடியூரப்பா கேட்டார். ஆனால் கவர்னரோ அதற்கு 15 நாட்கள் கொடுத்தார். குதிரை பேரத்தை நடத்தவே இந்த நீண்ட அவகாசத்தை கவர்னர் வழங்கினார். சுப்ரீம் கோர்ட்டு இந்த பிரச்சினையில் தலையிட்டது. இதனால் ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த விவகாரத்தின் பின்னணியில் மோடி உள்ளார். கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை அமைக்க விட மாட்டோம் என்று மோடி பகிரங்கமாக கூறினார். மோடி ஹிட்லரை போல் செயல்படுகிறார். அமித்ஷாவும் அவ்வாறே நடந்து கொள்கிறார். மதவாத சக்திகளை தோற்கடிக்க வேண்டும்.

குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கிறோம். புதிய மந்திரிகள் குறித்து நாங்கள் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார். 

Next Story