ஒகேனக்கல்லுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்


ஒகேனக்கல்லுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 20 May 2018 10:45 PM GMT (Updated: 20 May 2018 9:36 PM GMT)

வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்வார்கள். மேலும் பரிசலில் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள்.

இந்த நிலையில் நேற்று ஞாயிறு வாரவிடுமுறை என்பதாலும், கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இதையொட்டி அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் பலரும் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று இயற்கை அழகை கண்டு மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் தொங்கு பாலம், பார்வைகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நின்றவாறு இயற்கை அழகை ரசித்தனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போன்களில் காவிரியின் அழகை படம் பிடித்தனர். சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று அதிகமாக இருந்ததால் மீன் கடைகளில் மீன் வறுவல் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

மேலும் மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, நடைபாதை, பஸ் நிலையம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story