கல்லாத்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம்


கல்லாத்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 20 May 2018 10:30 PM GMT (Updated: 20 May 2018 9:48 PM GMT)

கல்லாத்தூரில் சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் தெற்கு முதலியார் தெருவில் சுந்தரமூர்த்தி, விநாயகர், பழனியாண்டவர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.

இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த 18-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் திருப்பள்ளி எழுச்சியும், 2-ம் கால யாகசாலை பூஜையும், திருமுறை பாராயணமும் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

அதனை தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜையும், யாத்ர தானம் உள்ளிட்ட பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து பக்தர்கள் சூழ கடம் புறப்பட்டு, கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கல்லாத்தூர், மேலூர், தண்டலை, வடவீக்கம், மருக்காலங்குறிச்சி, விழப்பள்ளம் வெட்டியார்வெட்டு, இறவாங்குடி, கூவத்தூர், சின்னவளையம், மலங்கன்குடியிருப்பு, செங்குந்தபுரம், ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story