தென்காசி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை


தென்காசி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 20 May 2018 10:45 PM GMT (Updated: 20 May 2018 10:45 PM GMT)

தென்காசி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

தென்காசி,

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள சிவராமபேட்டையை சேர்ந்தவர் கோட்டைசாமி (வயது 79). இவருடைய மகன்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோட்டைசாமி தனது மனைவியுடன் நேற்று முன்தினம் காலை நெல்லைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.17 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து இலத்தூர் போலீசில் கோட்டைசாமி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து, அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பொன்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தென்காசி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story