கருங்கல் அருகே சகோதரர் வீட்டுக்கு தீவைப்பு; தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு


கருங்கல் அருகே சகோதரர் வீட்டுக்கு தீவைப்பு; தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 May 2018 10:15 PM GMT (Updated: 23 May 2018 6:52 PM GMT)

கருங்கல் அருகே சகோதரர் வீட்டுக்கு தீவைத்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கருங்கல்,

கருங்கல் அருகே மிடாலக்காடு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மனைவி உஷா (வயது 32). லாரன்ஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. வீட்டில் உஷா, குழந்தையுடன் வசித்து வருகிறார்.

லாரன்சின் அண்ணன் ஜோஸ் (37), தொழிலாளி. இவருக்கும் உஷாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் உஷா, தனது குழந்தையுடன் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு ஆவரைகுளத்தில் உள்ள சகோதரி ஷோபா வீட்டிற்கு சென்றிருந்தார். இதைக்கண்ட ஜோஸ், உஷா வீட்டின் படுக்கை அறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து தீப்பந்தத்தை வீட்டின் உள்ளே போட்டு விட்டு தப்பிச் சென்றார். வீட்டின் அறையில் தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர், இதுபற்றி உஷாவிற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த உஷா வீட்டில் சென்று பார்த்தபோது, அந்த அறையில் இருந்த 2 கட்டில்கள், 2 பீரோக்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசை வலைவீசி தேடிவருகிறார்கள். சகோதரர் வீட்டுக்கு தொழிலாளி தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story