திருப்பூர் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை


திருப்பூர் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை
x
தினத்தந்தி 8 Jun 2018 10:30 PM GMT (Updated: 8 Jun 2018 7:45 PM GMT)

திருப்பூர் அருகே வாலிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம ஆசாமிகள், அவருடைய உடலை பாறைக்குழியில் வீசிச்சென்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பாறைக்குழி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் காலை அந்த பாறைக்குழி அருகில் உள்ள சாலையில் 2 இடங்களில் ரத்தம் உறைந்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பகுதியில் உடல்கள் ஏதேனும் கிடக்கிறதா? என்று தேடினார்கள். அப்போது, அங்குள்ள பாறைக்குழியின் பக்கவாட்டு பகுதியிலும் ரத்தக்கறை இருந்தது.

இதனால், யாரையோ சாலையில் வைத்து கொலை செய்துவிட்டு, உடலை பாறைக்குழியில் வீசி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். மேலும் அவினாசி தீயணைப்பு வீரர்கள் மூலம் பாறைக்குழியில் யாருடைய உடலாவது இருக்கிறதா? என்று போலீசார் தேடினார்கள். ஆனால் எதுவும் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடல் கணியாம்பூண்டி பாறைக்குழியில் மிதப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவினாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள், பாறைக்குழியில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு மேலே கொண்டுவந்தனர். பிணமாக மீட்கப்பட்ட வாலிபரின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் கருப்பு நிறத்தில் கட்டம் போட்ட சட்டை மற்றும் பேண்ட் அணிந்திருந்தார். அந்த வாலிபர் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதால், அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் மர்ம ஆசாமிகள் ஏற்கனவே திட்டமிட்டு கத்தியுடன் சம்பவ இடத்திற்கு வந்திருக்கலாம் என்றும், பின்னர் வாலிபரை அங்கு வரவழைத்து கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று இரவு மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் உமா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் மோப்பநாய் வெற்றியும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து ½ கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடிய மோப்பநாய் அந்த பகுதியில் வேலி போடப்பட்டிருந்த ஒரு தோட்டத்தின் அருகே நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதைதொடர்ந்து அந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? அவரை கொலை செய்த கொலையாளிகள் யார்? கொலைக்காண காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story