நெல்லை காங்கிரஸ் அலுவலகம் முன்பு காமராஜர், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி வெண்கல சிலைகள் அமைக்கப்படும்


நெல்லை காங்கிரஸ் அலுவலகம் முன்பு காமராஜர், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி வெண்கல சிலைகள் அமைக்கப்படும்
x
தினத்தந்தி 9 Jun 2018 9:15 PM GMT (Updated: 9 Jun 2018 6:56 PM GMT)

நெல்லை காங்கிரஸ் அலுவலகம் முன்பு காமராஜர், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோருக்கு வெண்கல சிலைகள் அமைக்கப்படும் என்று நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள்.

நெல்லை, 

நெல்லை காங்கிரஸ் அலுவலகம் முன்பு காமராஜர், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோருக்கு வெண்கல சிலைகள் அமைக்கப்படும் என்று நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள்.

வெண்கல சிலைகள்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களான சங்கரபாண்டியன் (மாநகர்), பழனிநாடார் (மேற்கு), எஸ்.கே.எம்.சிவகுமார் (கிழக்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டு ஒரு ஆண்டு முடிவடைந்து இரண்டாவது ஆண்டு தொடங்கியதையொட்டி நேற்று அவர்கள் நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு உள்ள காமராஜர், இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:–

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காமராஜர், இந்திராகாந்தி ஆகியோர் சிலைகள் சிமெண்ட் சிலைகளாக உள்ளன. இந்த சிலைகளை மாற்றிவிட்டு தலா ரூ.10 லட்சம் செலவில் வெண்கலத்தில் புதியதாக காமராஜர், இந்திராகாந்தி ஆகியோர் சிலைகள் அமைக்கப்படும். அதன் அருகில் ராஜீவ்காந்திக்கும் வெண்கலசிலை அமைக்கப்படும். இந்த சிலைகள் மாநில தலைவரிடம் ஒப்புதல் பெற்று விரைவில் அமைக்கப்படும். சிலைகளின் அருகில் செயற்கை நீரூற்றும் அமைக்கப்படும். இந்த சிலைகளின் திறப்பு விழா பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும். சிலைகளை ராகுல்காந்தி திறந்து வைக்கிறார்.

ராகுல்காந்தி பிறந்த நாள்

வருகிற 19–ந் தேதி ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கட்சியின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும். நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்படும். நெல்லையப்பர் கோவில், திருமலைகுமாரசாமி கோவில் ஆகியவற்றில் தங்கதேர் இழுக்கப்படும்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாளை (அதாவது இன்று) மாலை 5 மணிக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், மண்டல தலைவர்கள் தனசிங்பாண்டியன், மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நிர்வாகிகள் அண்ணாமலை, பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story