டிராக்டர் திருட்டு; வாலிபர் கைது 2 பேருக்கு வலைவீச்சு


டிராக்டர் திருட்டு; வாலிபர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Jun 2018 10:15 PM GMT (Updated: 9 Jun 2018 8:06 PM GMT)

பொறையாறில் டிராக்டர் திருட்டு தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

பொறையாறு,

பொறையாறு சிதம்பர நாடார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48), விவசாயி. இவர், அவருக்கு சொந்தமான டிராக்டரை டிப்பருடன் வீட்டின் அருகே கச்சேரி காளியம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைத்து இருந்தார். கடந்த 4-ந் தேதி சென்று பார்த்தபோது டிராக்டரும், டிப்பரும் காணாமல்போனதை கண்டு ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொறையாறு போலீசார் டிராக்டரை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் ரமேசுக்கு சொந்தமான டிராக்டரும், டிப்பரும் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கைது

அதன்பேரில் நேற்று அதிகாலை பொறையாறு அருகே அரும்பாக்கம் கிராமத்துக்கு போலீசார் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே டிப்பருடன் வந்த ஒரு டிராக்டரை மடக்கி பிடித்து டிரைவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், செம்பனார்கோவில் அருகே மாத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஞானபிரகாசம் (30) என்பதும், அவர் ஓட்டி வந்த டிராக்டர் பொறையாரில் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் டிப்பருடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானபிரகாசத்தை கைது செய்தனர். மேலும், ஞானபிரகாசம் கொடுத்த தகவலின் பேரில் வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story