அன்னவாசல் அருகே கோவில் கலசத்தை திருட முயன்ற 5 பேர் கைது


அன்னவாசல் அருகே கோவில் கலசத்தை திருட முயன்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2018 10:30 PM GMT (Updated: 10 Jun 2018 8:14 PM GMT)

அன்னவாசல் அருகே கோவில் கலசத்தை திருட முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அன்னவாசல்,

அன்னவாசல் அருகே உள்ள புல்வயலை அடுத்த நெரிகிப்பட்டியில் பழமை வாய்ந்த நெருகி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த மாடசாமி உள்பட 4 பேர் சேர்ந்து கோவிலில் சாமி கும்பிட வந்துள்ளனர். அவர்களுக்கு கோவில் பூசாரி சின்னத்தம்பி விபூதி வழங்கியுள்ளார். பின்னர் அவர்களிடம் யார் என விசாரித்த போது அவர்கள் விறகு வாங்க வந்ததாக கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் உள்ளூரை சேர்ந்த அழகேந்திரன் (வயது29) மற்றும் சரவணன் ஆகியோரின் உதவியுடன் கோவில் கலசத்தை திருட கோவிலை சுற்றி வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து மதுரையை சேர்ந்த மாடசாமி மற்றும் புல்வயலை சேர்ந்த அழகேந்திரன் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோவில் கலசத்தை திருட வந்தது தெரியவந்தது. இந்த விஷயம் மற்ற நான்கு பேருக்கும் தெரிந்து அங்கிருந்து தப்பித்து அலங்காநல்லூர் சென்று விட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மற்ற 4 பேரும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருப்பதை உறுதி செய்தனர்.

பின்னர் அங்கு சென்ற போலீசார் கோவில்பட்டியை கருப்பையா (42) வெள்ளியகுன்றம் சக்திவேல் (57) இடையப்பட்டி செல்வம் (46) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதில் புல்வயலை சேர்ந்த சரவணன் மட்டும் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து கோவில் பூசாரி சின்னத்தம்பி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். 

Next Story