திருபுவனை அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: பல லட்சம் ரூபாய், நகைகள் தப்பின


திருபுவனை அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: பல லட்சம் ரூபாய், நகைகள் தப்பின
x
தினத்தந்தி 10 Jun 2018 11:00 PM GMT (Updated: 10 Jun 2018 8:22 PM GMT)

திருபுவனை அருகே மதகடிப்பட்டில் உள்ள கூட்டுறவு வங்கியில் புகுந்து துணிகர கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.

திருபுவனை,

திருபுவனை அருகே மதகடிப்பட்டில் விவசாயிகள் சேவை கூட்டுறவு கடன் சங்கத்தின் வங்கி சேவை பிரிவின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நல்லூர் பகுதியைச் சேர்ந்த மேலாளராக ஜெயக்குமார், வங்கி பொறுப்பாளராக ஆறுமுகம் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வங்கி திறக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம மனிதர்கள் சிலர் வங்கியின் முன்பக்க இரும்பு கதவினை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு நகை, பணம் வைக்கப்படும் லாக்கர் அறையின் முன்பகுதியில் இருந்த இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

வங்கியின் அபாய மணிக்கான மின் இணைப்பை துண்டித்து விட்டு நகைகள் மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த இரும்பு லாக்கரை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் வங்கி லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்களது முயற்சி பலிக்காததால் தாங்கள் வந்து சென்ற தடயங்களை மறைக்க வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், காட்சிகள் பதிவாகும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தி விட்டு ஹார்டு டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

மர்ம ஆசாமிகளின் கொள்ளை முயற்சி நிறைவேறாததால் லாக்கரில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் தப்பின.

வங்கியில் கொள்ளையடிக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த பேப்பர் விற்பனை கடையின் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். சத்தம்கேட்டு அந்த கடையின் அருகில் இருந்த வீட்டின் உரிமையாளர் எழுந்து வந்து மின்விளக்கினை போட்டுள்ளார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

நேற்று அதிகாலை அந்த பகுதியில் துப்புரவு ஊழியர்கள் வங்கியின் முன்பகுதியில் சுத்தம் செய்தபோது வங்கி கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்திருப்பதை பார்த்து அருகில் உள்ள டீக்கடையில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.

உடனே அவர்கள் திருபுவனை போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் கொள்ளை முயற்சி நடந்த வங்கிக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுபற்றி தகவல் தெரிவித்து வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் தனசேகரன், முருகன் ஆகியோர் வங்கியில் பதிவான கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

இந்த கொள்ளை முயற்சி குறித்து வங்கியின் பொறுப்பாளர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மதகடிப்பட்டு பகுதியில் ஒரிசா, பீகார் உள்ளிட்ட பல வடமாநில இளைஞர்கள் திருபுவனையை சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளில் தங்கி இருந்து அங்குள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை சந்திக்க உறவினர்கள் போல் வந்தவர்கள் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் கடந்த வாரத்தில் வந்து தங்கி சென்றவர்களின் முகவரிகளையும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story