நாமக்கல்லில் பயங்கரம்: தொழிலாளி வெட்டிக்கொலை பழிக்கு பழியாக நடந்ததா? போலீஸ் விசாரணை


நாமக்கல்லில் பயங்கரம்: தொழிலாளி வெட்டிக்கொலை பழிக்கு பழியாக நடந்ததா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 10 Jun 2018 11:00 PM GMT (Updated: 10 Jun 2018 8:47 PM GMT)

நாமக்கல்லில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பழிக்கு பழியாக நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள தாதம்பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி (வயது 50). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நாமக்கல் காவேட்டிப்பட்டியில் வசித்து வந்தார். இவருடைய மகன் சுரேஷ் (26).

இந்த நிலையில் நேற்று மாலை நாமக்கல் குறவர்காலனி பகுதியில் நல்லுசாமி, உறவினர்கள் குமார், அவரது நண்பர் குட்டி ஆகியோர் மதுகுடித்து உள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறு முற்றியதில் குமார் மற்றும் குட்டி ஆகிய இருவரும், உதவிக்கு அவர்களது நண்பர்கள் 6 பேரை அழைத்து உள்ளனர்.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர், குமார் மற்றும் குட்டி ஆகிய 8 பேரும் சேர்ந்து குடிபோதையில் இருந்த நல்லுசாமியை தூக்கி, மோட்டார் சைக்கிளில் வைத்து நாமக்கல் காவேட்டிப்பட்டியில் உள்ள லாரி பட்டறை ஒன்றுக்கு கொண்டு வந்து உள்ளனர்.

அங்கு மறைத்து வைத்து இருந்த அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அந்த கும்பல் நல்லுசாமியை சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதை பார்த்த சுரேஷ், கொலை கும்பலிடம் இருந்து தப்பி நாமக்கல் நல்லிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த நல்லுசாமியின் உடலை பார்வையிட்டு பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மகன் சுரேஷிடம் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கொலை சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நல்லுசாமி 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்று இருப்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.

எனவே அந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கில் நல்லுசாமி படுகொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story