பள்ளிக்கு கட்டிட வசதி கோரி மாணவர்கள், பெற்றோர் முற்றுகை போராட்டம்


பள்ளிக்கு கட்டிட வசதி கோரி மாணவர்கள், பெற்றோர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:45 PM GMT (Updated: 11 Jun 2018 9:41 PM GMT)

ராசிபுரம் அருகே, பள்ளிக்கு கட்டிட வசதி கோரி மாணவ, மாணவிகள், பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

ராசிபுரம்,

ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஒன்றியம் மலையாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக பூங்கொடி பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் மலையாம்பாளையம், குட்டலாடம்பட்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் திருக்குறளை ஒப்புவிப்பதில் சிறந்து விளங்குகின்றனர். தனியார் பள்ளிகளைப்போல் பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை வேன் மூலம் அழைத்து வந்து பள்ளியில் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பள்ளிக்கு போதிய கட்டிட வசதி இல்லை என்று தெரிகிறது. மேலும் இருக்கிற வகுப்பு அறை கட்டிடமும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

எனவே பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும், பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பள்ளியின் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ, மாணவிகளின் இப்போராட்டத்தை பற்றி கேள்விப்பட்டதும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிகாரிகளிடம் எடுத்துச்சொல்லி கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். 

Next Story