பெரும்பள்ளம் அணை பகுதியில் கடத்துவதற்காக வைக்கப்பட்ட 150 மணல் மூட்டைகள் பறிமுதல்


பெரும்பள்ளம் அணை பகுதியில் கடத்துவதற்காக வைக்கப்பட்ட 150 மணல் மூட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:58 PM GMT (Updated: 11 Jun 2018 10:58 PM GMT)

பெரும்பள்ளம் அணை பகுதியில் கடத்துவதற்காக வைக்கப்பட்ட 150 மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில் பெரும்பள்ளம் அணை உள்ளது. இந்த அணைக்கு கடம்பூர் மலைப்பகுதி மற்றும் மல்லியம்மன் துர்கம் மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீர் காட்டாறு வழியாக வந்து சேருகிறது. அணை நிரம்பியதும் அதன் உபரிநீர் மதகு வழியாக வெளியேறி கெம்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பள்ளத்தின் மூலமாக பவானி ஆற்றை சென்றடைகிறது.

மழைநீரில் அடித்துவரப்படும் மணல் இந்த பள்ளத்தில் அதிக அளவு படிந்துள்ளது. இந்த மணலை அந்த பகுதியில் உள்ள மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பகல் நேரத்தில் அள்ளி விற்பனை செய்கிறார்கள் என்று பொதுமக்கள் சத்தியமங்கலம் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தார்கள்.

அதைத்தொடர்ந்து தாசில்தார் கிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் குத்தியாலத்தூர் நில வருவாய் ஆய்வாளர் பொன்னுசாமி, கெம்பநாயக்கன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி ஆகியோர் பெரும்பள்ளம் அணை பகுதிக்கு சென்று பார்த்தார்கள். அப்போது நரசாபுரம், தண்ணீர்பந்தல், கொருமடுவு ஆகிய இடங்களில் 150 சிமெண்ட் சாக்கு பைகள் வைக்கப்பட்டிருந்து.

அவற்றை பிரித்து பார்த்தபோது மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ மர்மநபர்கள் கடத்துவதற்காக அணை பகுதியில் உள்ள பள்ளங்களில் மணலை அள்ளி அவற்றை மூட்டைகளில் நிரப்பி வைத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘இதுபோல் மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story