பசுமை சாலை திட்டம்: விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் - கம்யூனிஸ்டு கட்சியினர் மனு


பசுமை சாலை திட்டம்: விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் - கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 11:00 PM GMT)

பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு அளித்தனர்.

சேலம்,

பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் சிலர் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் யாருடைய நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க வருகிற 14-ந் தேதி கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்துக்கு முன்பாக கடந்த 6-ந் தேதி ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்தில் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளக்க வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் சிலரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். இதில் முத்துகுமார், மாரிமுத்து ஆகிய விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

இந்த செயல் மாவட்ட கலெக்டர் கூட்டிய கூட்டத்திற்கு கலந்து கொள்ள விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாகவே கருதுகிறோம். சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும். விசாரணை என்ற பெயரில் போலீசார் விவசாயிகள் வீட்டுக்குள் சென்று அவர்களை அச்சுறுத்துவதை தடுத்திட வேண்டும். கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்ப பெற வேண்டும். மேலும் விவசாயிகள் முத்துகுமார், மாரிமுத்து ஆகியோர் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story