நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது


நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 12 Jun 2018 9:00 PM GMT (Updated: 12 Jun 2018 2:40 PM GMT)

நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது.

நெல்லை, 

நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்ட திருவிழா வருகிற 19–ந்தேதி தொடங்கி, 27–ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் போலீசார் சட்டம்–ஒழுங்கினை பராமரித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேரோட்டத்தன்று மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவக்குழு

தேரோட்டம் நடைபெறும் வருகிற 27–ந்தேதியன்று மாநகராட்சி, மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் நான்கு ரதவீதிகளிலும், தேர் பதியாத வண்ணம் முன்னதாகவே சாலைகளை பழுது பார்த்திட வேண்டும். மாநகராட்சி சார்பில் திருவிழா நாட்களில் குடிநீர் இணைப்புகளில் தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்திட வேண்டும். தற்காலிக கழிப்பிட வசதிகளை ஏற்பாடு செய்திட வேண்டும். நான்கு ரத வீதிகளிலும் மருத்துவ குழு அமைத்திட வேண்டும்.

மின்சார வாரியத்தினர் மின் தடையில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். தேரோட்டத்தின்போது மின் கம்பிகளால் இடையூறு இல்லாத வகையில் பாதுகாப்பு செய்திட வேண்டும். தேரோட்டத்திற்கு போக்குவரத்து துறையினர் சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அறநிலையத் துறையினர், கோவில் நிர்வாகத்தினருக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி, தேர்களை இழுப்பதற்கு நல்ல வடங்களை ஏற்பாடு செய்து, தேரை நிலைக்கு கொண்டு சேர்ப்பதற்கு திறமையான பணியாளர்களை பணியில் அமர்த்திட வேண்டும்.

மதுக்கடைகளை மூட வேண்டும்

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், உடனடியாக தற்காலிக விளக்குகள் மற்றும் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்திட வேண்டும். தேரோட்டத்தையொட்டி முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீயணைப்பு துறையினர் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும். தேரோட்டத் தினத்தன்று ரதவீதி மற்றும் அருகிலுள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் சுகுணாசிங், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பொற்செல்வன், மாநகராட்சி உதவி ஆணையாளர் சுப்புலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷிணி உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


Next Story