குறுவைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கல்லணையில் நெல் விதைகளை தூவி விவசாயிகள் போராட்டம்


குறுவைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கல்லணையில் நெல் விதைகளை தூவி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2018 11:00 PM GMT (Updated: 12 Jun 2018 8:41 PM GMT)

குறுவைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கல்லணையில் நெல் விதைகளை தூவி போராட்டம் நடத்திய விவசாயிகள் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி,

குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

தமிழக விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லணையில் நெல் விதைகளை தூவி போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கம் அறிவித்தது. அதன்படி நேற்று கல்லணையில் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தலைமை தாங்கினார்.

இதில் காவிரி தமிழ் தேசிய விவசாயிகள் சங்க தலைவர் சுப்பிரமணியன், தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் லெட்சுமணன், பொன்ரவிச்சந்திரன், சரபோஸ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கல்லணையில் மண்வெட்டியால் கொத்தி நெல் விதைகளை தூவி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 26 பேரையும் கைது செய்தனர். விவசாயிகள் கல்லணையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். ஆனால் விவசாயிகள் மாற்று பாதையில் வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story