குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்


குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 12 Jun 2018 10:30 PM GMT (Updated: 12 Jun 2018 9:08 PM GMT)

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. அதனை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தேனி

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம் தேனி காமராஜர் பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பிரசார பதாகையில் கையெழுத்திட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்களுக்கும், பஸ்களில் பயணம் செய்த பயணிகளுக்கும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த தினத்தையொட்டி பொதுமக்களிடம் பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. 14 வயதுக்கு உட்பட்டவர்களை தொழிலாளர்களாக பணியமர்த்தும் கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் மீது கோர்ட்டு மூலம் வழக்குகள் தொடர்ந்து தண்டனை மற்றும் அபராதம் விதித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றாமல் அவர்களின் எதிர்கால வாழ்விற்கு உறுதுணையாக பொதுமக்கள் இருக்க வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில் தொழிலாளர் நல உதவி ஆணையர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், பஞ்சு, ராஜா மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

Next Story