ஸ்கூட்டியில் சென்ற போது விபத்து லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி


ஸ்கூட்டியில் சென்ற போது விபத்து லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
x
தினத்தந்தி 12 Jun 2018 10:34 PM GMT (Updated: 12 Jun 2018 10:34 PM GMT)

வேலூரில் ஸ்கூட்டியில் சென்ற பெண் மீது லாரி மோதியதில் அந்த பெண் லாரி சக்கரத்தில் சிக்கி 25 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உடல்நசுங்கி பரிதாபமாக செத்தார்.

வேலூர்,

சோளிங்கரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி உஷா (வயது 37). ரவி ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் உஷா திருவலத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வேலூருக்கு வந்துள்ளார்.

மாலையில் வேலூரில் அண்ணாசாலையில் உள்ள முஸ்லிம் மேல்நிலை பள்ளி அருகே உஷா ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி உஷா ஓட்டிச்சென்ற ஸ்கூட்டிமீது உரசி உள்ளது. இதில் நிலைதடுமாறிய உஷா கீழே விழுந்தார்.

அப்போது லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். இதனால் சுமார் 25 அடி தூரத்திற்கு அவர் இழுதத்து செல்லப்பட்டுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். உடனே டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். சக்கரத்தில் சிக்கிய உஷா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து காரணமாக அண்ணாசாலையில் போக்குவரத்து தடைபட்டு நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் தெற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை வேறுபாதையில் மாற்றிவிட்டனர்.

பின்னர் உஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story