ஆரணியில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


ஆரணியில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2018 10:00 PM GMT (Updated: 13 Jun 2018 6:01 PM GMT)

ஆரணியில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணிக்கு வடக்கு நெல்லூர் ஊராட்சி துரைநெல்லூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

மேலும், ஆரணியை கடந்து குமரப்பேட்டை, காமாட்சிநகர், புதுப்பாளையத்தின் ஒரு பகுதி, காரணியின் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் செல்கிறது.

இவ்வாறு மின்சாரம் செல்லும் மின் கம்பங்கள் பல பகுதிகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளது. இந்த மின்கம்பங்களை மாற்றி புதிதாக மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறினர்.

ஆரணி–பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஆரணி சமுதாய கூடத்துக்கு எதிரே சாலையின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மின் கம்பம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பகுதியில் சமுதாய நலக்கூடம் உள்ளது. மேலும், சமுதாய கூடத்தில் பல நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்.

அப்போது இங்கு வரும் பொதுமக்கள் ஒருவகை பயத்துடனே அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். ஆனால், மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆரணி பகுதியில் பல்வேறு இடங்களில் இதேபோன்று மின்கம்பங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. அவற்றை போர்க்கால அடிப்படையில் மாற்றி விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story