கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2018 10:45 PM GMT (Updated: 14 Jun 2018 9:36 PM GMT)

ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெயசந்திரராஜா, கிருஷ்ணன், கோவிந்தராஜ், சோமேஸ்வரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பிரசார செயலாளர் சுகமதி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அப்போது, ரேஷன்கடையில் 21 ஆண்டுகள் பணிபுரிந்த விற்பனையாளரை பழிவாங்கும் நோக்குடன் எடையாளராக பதவி குறைப்பு செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு உரிய பதவி உயர்வை மீண்டும் வழங்க வேண்டும்.

ரேஷன்கடைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் உணவு பொருட்களை முழுமையாக எடையிட்டு சரிபார்க்க வேண்டும் என்ற விதிமுறையை தர்மபுரி மாவட்டத்தில் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராமஜெயம், குணசேகரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜான்ஜோசப் நன்றி கூறினார். 

Next Story