கே.ஆர்.எஸ். அணை 100 அடியை தாண்டியது கபினியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைந்தது


கே.ஆர்.எஸ். அணை 100 அடியை தாண்டியது கபினியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைந்தது
x
தினத்தந்தி 18 Jun 2018 12:11 AM GMT (Updated: 18 Jun 2018 12:11 AM GMT)

கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 23,424 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது.

மண்டியா,

கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர்(கே.ஆர்.எஸ்.) அணை 100 அடியை தாண்டி உள்ளது.

காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 2 வாரங்களாக பருவமழை கொட்டித்தீர்த்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. மேலும் மழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்தது.

கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி ஆகும். கடந்த மாதம்(மே) அணையின் நீர்மட்டம் 74 அடிக்கும் குறைந்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணையை நம்பி உள்ள பெங்களூரு, ராமநகர், மைசூரு, மண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் காலையில் 6 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 98.20 அடியாக இருந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 23,424 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 453 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று மாலையில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கே.ஆர்.எஸ். அணையின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

குடகு மற்றும் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தற்போது கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது. இதனால் பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராமநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது.

இதேபோல் தொடர்ந்து மழை பெய்து நீர்வரத்து இருந்தால் ஜூலை மாதம் 2-வது வாரத்திற்குள் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் தனது முழுகொள்ளளவான 124.80 அடியை எட்டிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கனமழையால் தனது முழுகொள்ளளவை எட்ட இருந்த கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதற்கு காரணம் கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததுதான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கபினி அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்து இருந்தது. அணைக்கு வினாடிக்கு 21,500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையின் நீர்மட்டம் 2,284.80 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். அணையின் நீர்மட்டம் தற்போது 2,280.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்ததால் அணை விரைவில் நிரம்பிவிடும் என்று நம்பப்பட்டது. இதனால் அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 35,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் வினாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால் தமிழகத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

Next Story