நெல் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் எடப்பாடி பழனிசாமியிடம், இயற்கை விவசாயிகள் வலியுறுத்தல்


நெல் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் எடப்பாடி பழனிசாமியிடம், இயற்கை விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Jun 2018 10:45 PM GMT (Updated: 18 Jun 2018 7:02 PM GMT)

சீர்காழியில் அடுத்தமாதம் 21, 22-ந் தேதிகளில் நடைபெறும் நெல் திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம், இயற்கை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் நேற்று காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்து இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை காவிரி இல்லத்தில் தங்கி இருந்தார். அப்போது அவரை, சீர்காழியை சேர்ந்த நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை தலைவர் ரெங்கராஜன், செயலாளர் சுதாகர் மற்றும் உறுப்பினர்கள், இயற்கை விவசாயிகள் சிலர் நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை வேளாண்மை மண்டலம், சிறப்பு தொகுப்பு திட்டங்கள், சிறந்த விவசாயிகளுக்கு மாநில அரசு உதவி போன்ற ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி இயற்கை விவசாயிகளின் கனவுகளை நினைவாக்கி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் கோரிக்கை மனுவை எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

இயற்கை விவசாயத்தில் விளையும் வேளாண்மை விளை பொருட்களை அரசு கொள்முதல் செய்து அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் ஆரோக்கியமான உணவை வழங்கி இயற்கை விவசாயத்தை அதிகப்படுத்தி இயற்கை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டும். பாரம்பரிய நெல் விதைகளையும், இயற்கை விவசாயத்தையும், பாரம்பரிய உணவையும் தமிழகம் முழுவதும் பரப்ப தங்களது (எடப்பாடி பழனிசாமி) தலைமையிலான அரசு முன் வரவேண்டும்.

தற்போது பல விவசாயிகள் தமிழகம் முழுவதும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்கள். எங்கள் விவசாயத்தில் அரசு மானியத்துடன் வழங்கும் ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளை உபயோகிப்பதில்லை. எனவே, இதற்காக அரசு கொடுக்கும் மானிய தொகையை நில அளவின் அடிப்படையில் எங்களுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் மிக முக்கிய உணவு உற்பத்தி கேந்திரமான காவிரி டெல்டா பகுதியை பேரழிவு திட்டங்களில் இருந்து காப்பாற்றும் விதமாக காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் இந்த ஆண்டு சம்பாவை காலத்தில் செய்ய உதவியாக ஜூலை 15-ந் தேதிக்குள் அணை திறப்பதை உறுதி செய்ய வேண்டும். இயற்கை விவசாயம் செய்வோருக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் அரசு மானியமாக வழங்க வேண்டும்.

இந்த ஆண்டு புதிய விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளின் நிலுவை இழப்பீடு தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருப்புக்கவுனி, கிச்சடி சம்பா, மாப்பிள்ளை சம்பா, திணை ஆகிய தானியங்களால் 3 அடி உயரம், 2 அடி அகலத்தில் எடப்பாடி பழனிசாமி உருவப்படம் வரையப்பட்டு இருந்தது. அந்த உருவப்படத்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் வழங்கினர். மேலும், சீர்காழியில் ஆண்டுதோறும் நடைபெறும் நெல் திருவிழா விஷேசமானது. இந்த ஆண்டு அடுத்த மாதம் (ஜூலை) 21,22 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் வலியுறுத்தினர். அப்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story